ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை

101 0
ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதும் எவருமே காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சனிக்கிழமை  (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஆட்சியாளர்கள் மாறிவருகின்றபோதிலும் தமது குரலுக்கு எவருமே செவிசாய்க்கவில்லை. தமது தொடர்ச்சியான போராட்டங்களின்போது தமது பக்கமாக நின்ற அனுர அரசாங்கமானது தற்போது ஆட்சிக்கு வந்த பின்னராக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் சாதிக்கின்றது.

காலங்கள் மாறுகின்றபோதிலும் எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறிவருகின்றபோதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலமை தொடர்கதையாகவே காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி வீதியில் இறங்கி பெண்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையிலே தற்போது அத்தியாவசிய பொருட்களது விலைகளும் குறைந்தபாடில்லை ஆகையால் தமக்கு எங்கு பார்த்தாலும் இன்னல்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

அதுபோலவே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைபார்க்கச் செல்லும் பெண்களது நிலமைகளும் அவர்களது பிள்ளைகளது வாழ்வும் தொடர்ச்சியான இன்னல்களை சந்திக்கும் நிலையாகவே காணப்படுவதுடன் இதிலிருந்து பெண்கள் விடுபட்டு தமது வாழக்கையை நடத்த மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர்  தெரிவித்தார்.