வடக்கில் போதைப்பொருள் விசேட மத்திய நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை

114 0

வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப்பொருள்   பாவனை  உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள்  ஒழிப்பு தொடர்பில்   விசேட  மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) மாலை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.கடந்த   காலங்களில்  அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக  போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்ந்து முடிவுக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருள்    ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம்  கடந்த  செவ்வாய்க்கிழமை  174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள்   பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபி பிப்பதற்குரிய நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.  அதேபோல் வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புனர்வுகள் வழங்கப்படும்.

2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில்   168 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு,  279 கிராம் ஹெரோயின்,  2,140 கிராம்  கேரள கஞ்சா,  423 கிராம்  ஐஸ் போதைப்பொருள், 4,1048   போதைப்பொருள்  குழிசைகள் கைப்பற்றபட்டன.

அதேபோல்  யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்,  650 கிராம் கேரள கஞ்சா, 2,6915 போதைப்பொருள் குழிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை   குறைவான  போக்கில் இருப்பதை  காண முடிகிறது.இருப்பினும்  ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது.

வடக்கில்  போதைப்பொருள்  ஒழிப்பு தொடர்பில் விசேட  மத்திய நிலையத்தை அமைப்பதற்கு  உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக  போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார்.