மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்தமைக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்காக 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று புதன்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்தமைக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்காகவும் விவசாயிடம் 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரிடம் இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர், செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் வைத்து கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயிடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் அதனை கண்காணித்துக் கொண்டிருந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்து 50 ஆயிரம் ரூபாவை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் எனவும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

