“எரிபொருள் பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லை”

89 0

எரிபொருளை 3 சதவீத கழிவு கொடுப்பனவு செய்வதற்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் (02) எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா கூறியுள்ளார்.

அதேநேரம், நாடு முழுவதும் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமை (28) முதல் நிலவிய வாகன வரிசைகள் நேற்றிரவு முதல் குறைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் 3 சதவீத கழிவு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

எனினும், சனிக்கிழமை (01) முதல் இந்த ஒப்பந்தத்தை நிறைவுறுத்துவதற்கு இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அத்துடன், குறித்த கழிவு தொகையை நிர்ணயிப்பதற்காக ஒரு புதிய முறைமை ஒன்றும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மூன்று சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.