பாதாள குழுக்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்

88 0

பாதாளக் குழுக்கள் மோதிக் கொள்ளும் போது  எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. பாதுகாப்பு கோருகிறார்கள். பாதாள குழுக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்  இடையில் தொடர்புண்டு என்பதை  எதிர்கட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.  பாதாள குழுக்களை இல்லாதொழிப்போம் என  தேசிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராய்ச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

மக்களினதும், நாட்டினதும் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு  2025  ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  பல  திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த கால வரவு  செலவுத் திட்டங்கள் எவ்வாறானது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு  மத்தியில் தான் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச செலவுகளை வரையறுத்துக் கொண்டு நலன்புரி திட்டங்களுக்கு   அதிக   நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்திக் கொண்டு  அதன் உச்ச நாட்டு  மக்களுக்கு வழங்குவோம்.

நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளை கணேமுல்ல சஞ்ஜீவவும், மித்தெனிய படுகொலையும் பாதுகாத்துள்ளது. இவ்விரு சம்பவங்களும் வேறுப்பட்டது. ஆகவே இரண்டையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம்  என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

பாதாளக் குழுக்கள் மோதிக் கொள்ளும் போது  எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. பாதுகாப்பு கோருகிறார்கள். பாதாள குழுக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்  இடையில் தொடர்புண்டு என்பதை  எதிர்கட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நாட்டில் பாதாள குழு தோற்றம் பெறுவதற்கான சூழலை  ஐக்கிய தேசியக் கட்சியே  ஏற்படுத்தியது.1980   ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச சேவையாளர்கள்  10 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.

அரச சேவையாளர்களை அடக்குவதற்காக,  ஜே.ஆர். ஜயவர்தன சைக்கிள் சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு திரிந்த சண்டியர்களை பயன்படுத்தினார்.இதன் பின்னரே தான் பாதாள குழுக்கள்  பல்வேறு வகையில் எழுச்சி பெற்றன.

பாதாள குழுக்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம்  கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். பாதாள குழு  தரப்பினர்கள் அவர்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்றார்.