இயற்கை வேளாண்மை, மாடி தோட்டம் குறித்த பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு

101 0

 மாடி தோட்டம் அமைப்பது, இயற்கை வேளாண்மை குறித்து நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் பிப்.27-ம் தேதி, மாடி தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் தோட்டம் அமைக்கும் முறைகள், நாற்றங்கால் அமைத்தல், ஊட்டச்சத்துக்கள் அளித்தல், சீரமைப்பு முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடை உள்ளிட்டவை குறித்து விரிவாக செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

அங்கக வேளாண்மை: இதேபோல் பிப்.28-ம் தேதி நடைபெறும் காய்கறி பயிர்களில் அங்கக வேளாண்மை செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மையின் கொள்கைகள், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக தரச் சான்றிதழ் பெறுவது ஆகியவை பற்றி சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

பஞ்ச​காவ்யா தயாரிப்பு: இடுபொருட்கள் தயாரித்தலில் பஞ்சகாவ்யா தயாரிப்பு முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் வழங்கப்படும். விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் இந்த பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.