எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நிலையில், தற்போது 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளது.
ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

