ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு, கண்டி தலாதா மாளிகை, கொழும்பு சிவப்பு பள்ளிவாசல் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவஸ்தானம் உள்ளிட்ட மத ஸ்தலங்களுக்கு சென்றுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஊடாக ஒழுங்கிணைக்கப்பட்டுள்ள சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் விஜயத்தில் இன நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து சீன அமைச்சர் கலந்துரையாட உள்ளனர். ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளுவதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
குறிப்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சீன தரப்பு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது.
அண்மைக் காலமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சீனாவின் ஆதரவு திட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு, தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

