கணவனுக்கு ஐஸ்: மனைவி கைது

138 0

சிறையிலிருக்கும் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக   உணவுடன் ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை சூட்சுமமாக மறைத்து கொண்டு சென்ற குறித்த சந்தேக நபரின் மனைவியை செவ்வாய்க்கிழமை மாலை (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைய மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவனை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலைகளை மனைவி எடுத்துச் சென்றுள்ளார். அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போது புகையிலைக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதுடன் குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடி 3ஆம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்