விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?

77 0

விவசாயிகள் கைவிடப்பட்டதைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா இல்லையா என்பதை இன்று வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பார்க்கலாம்.

அரசாங்கம் செல்லும் பாதை தவறானது என கூட்டுறவு சங்கத் தேர்தலில் மக்கள் சமிஞ்ஞை காண்பித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16)  உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறும். இத்தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய நாமே முதலில் நீதிமன்றத்தையும் நாடினோம்.

அதற்கமையவே விரைவில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. தேர்தலை நடத்துவதாயின் பழைய வேட்புமனு இரத்து செய்யப்பட வேண்டும்.

அதற்காகவே இந்த திருத்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.

திங்களன்று இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால், ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவே அதனை தீர்மானிக்கும்.

அரசாங்கம் செல்லும் பாதை தவறானது என கூட்டுறவு சங்கத் தேர்தலில் மக்கள் சமிஞ்ஞை காண்பித்துள்ளனர். தற்போது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்களது வாழ்க்கை செலவு, வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இன்னும் தீர்வினை வழங்கவில்லை. விவசாயிகள் கைவிடப்பட்டதைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா என்பதை வரவு – செலவு திட்டத்தில் அவதானிக்கலாம். மறுபுறத்தில் வெளிநாட்டு முதலீட்டார்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இரு புறங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்த கட்சிகள் இணைவது இலகுவானதல்ல. எவ்வாறிருப்பினும் ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு சிறிது காலம் செல்லும் என்றார்.