ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
வியாழக்கிழமை (13) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் கால வரையறையின்றி தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமைக்கு எதிராக நாமே குரல் கொடுத்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளை நெருக்கடிக்குள்ளாக்கி அவசரமாக தேர்தலை நடத்த முற்படுகிறது. எனவே தேர்தலை அநாவசியமாக காலம் தாழத்ததாது எதிர்க்கட்சிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பொறுத்த காலத்தில் நடத்துமாறு கோருகின்றோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். எனினும் அதனை விட சாதாரண தர பரீட்சைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் பிரசாரங்களை முன்னெடுப்பது பொறுத்தமானதாக இருக்காது. எமக்குள்ள மற்றொரு பிரதான பிரச்சினை நிதியாகும். ஏனைய கட்சிகளைப் போன்று எமது கட்சிகள் செல்வந்த கட்சிகளும் அல்ல. எனவே புத்தாண்டின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் பொறுத்தமாக இருக்கும்.
ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கும் இந்த தீர்மானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நீண்ட கால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.
ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராக நியமிக்கப்பட வேண்டும். காரணம் அதிக பலம் அவரிடமே காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியில் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றார்.

