இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர்

88 0

மே 09 வன்முறையில் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டை புனரமைக்க 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன். இதில் யாருக்கு என்ன பிரச்சினை. இழப்பீடு தொகையை பற்றி பேசும் ஆளும் தரப்பினரே எமது வீடுகளுக்கு தீ வைத்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மே 09 வன்முறையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் தான் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 150 மில்லியன் ரூபா செலவழித்து நான் வீட்டை நிர்மாணித்தேன். கலவரத்தின் போது எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

ஆகவே வீட்டை நிர்மாணிப்பதற்கு 54 மில்லியன் ரூபாவை இழப்பீடாக பெற்றுக் கொண்டேன்.இதில் யாருக்கு என்ன பிரச்சினை.

இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். முடிந்தால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

பிலியந்தல பகுதியில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.