மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக மாநட்டில் வைத்தே அவர் இதனை வௌிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.
அதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல் தந்தனர். இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்தரப்பட்டுள்ளன.
அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது.

