அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமையளித்து 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து 70% மின் உற்பத்தியை அடைய திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி (வேராவில்) 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் கரைச்சி 100 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஆகிய இரு பிரதான திட்டங்கள் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இரு காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

வியாழக்கிழமை (06) கலந்துரையாடலில் கிராஞ்சி(வேராவில்) 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு பெறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்(EIA) விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு அவர்களது ஆலோசனைக் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (7) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் அதிகாரிகள் கிராஞ்சி (வேராவில்) பகுதிக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளனர்.

மேலும், கரைச்சி 100 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை(EIA) பெறப்படவுள்ள நிலையில், அதன் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு ஆலோசனைக் கருத்துக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து இவை அடுத்து வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரு திட்டங்களின் ஆரம்ப செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையானது இதனுடன் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரைடி அவர்களது ஆலோசனைகளை பெறும் நோக்கில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரி.எம். விஜேந்திர ஜயலத் பண்டார, மேலதிக பணிப்பாளர் நாயகம் H.A. Vimal Nadeera, உதவிப் பணிப்பாளர்களான Eng P. Dilakshan, Eng.Chatura Wanniaracchi, பூநகரி பிரதேச செயலாளர் ரி.அகிலன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சி.கஜேந்திரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், இராணுவ அதிகாரிகள், திட்டத்துடன் தொடர்புடைய மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

