ஜனாதிபதி நிதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் இந்த நிதியத்துக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி நிதியத்தின் முந்தைய முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் விசாரிக்கப்பட்டு நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் ஒருபோதும் நிகழ அனுமதிக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நிதியத்துக்கான விண்ணப்பங்களை ஏற்கும் சேவைகளை நாட்டிலுள்ள 341 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்துதல், பிரதேச செயலகங்கள் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் பிரதேச செயலகங்களில் அந்தந்த துறைகளில் ஈடுபட்டுள்ள அலுவலகர்களுக்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி நிதியம் தற்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், விண்ணப்பங்களை எளிதாக்குவதற்கும், இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு புதிய கணினி கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும், அந்த கட்டமைப்பின் ஊடாக பொதுமக்கள் இந்த நிதியத்துக்கு இணையவழி ஊடாக நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

