புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் : வாக்குப்பதிவு மந்தம்

108 0
புது தில்லியில் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. மதியம் ஒரு மணி வரை 33.31 சதவீத வாக்குகளே பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது.

70 தொகுதிகள் கொண்ட புதுடில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 56 லட்ச வாக்காளர்களுக்கு வாக்களிக்க 13,766 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் சில வாக்கு சாவடி மையங்களில் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமான ராகுல் காந்தி, புது தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதுஷி ,பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் என பலரும் வாக்களித்தனர்.  இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை 33.31% வாக்குகளை பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.‌

பதிவான வாக்குகளை எதிர்வரும் எட்டாம் திகதியன்று காலை 8 மணி முதல் எண்ணும் பணி தொடங்கும் என்றும், இரண்டு மணி தியாலத்திற்குப் பிறகு முடிவுகள் தெரியவரும் என்றும் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

புது டெல்லி சட்டப்பேரவைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே யார் ஆட்சியை கைப்பற்றுவது? என்ற மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.