வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு விண்ணப்பித்துள்ளார்.
அதன் வழக்கு விசாரணை வரவுள்ளதால் விளக்கமறியலை நீடித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

