மாவைக்கு என்.பி.பி எம்.பி இளங்குமரன் அஞ்சலி

150 0

தமிழ்த் தேசியம் தடம்புரளக்கூடாது என்பதற்காக அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயல்பட்டவர் மாவை சேனாதிராஜா ஐயா. மக்களுக்காக களமாடி சிறைச்சாலைகூட சென்றுள்ளார். இப்படியான ஒரு தலைவரின் இழப்பு நிச்சயம், இலங்கை அரசியலுக்கு பெரும் இழப்பாகும். குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரிழப்பாகும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான, யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் கவலையளிக்கின்றது.

இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 ஆம் ஆண்டு இணைந்தார். அன்று முதல் இறுதி மூச்சு இருக்கும்வரை தமிழரசுக் கட்சியுடன் அவரது பயணம் தொடர்ந்தது.
அவரது நேர்த்தியான, நேர்மையான அரசியல் பயணத்தால்தான் பாரம்பரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், தலைவர் ஆகிய பதவிகளைக்கூட வகிக்க முடிந்தது.

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.

மாவை சேனாதிராஜா ஐயாவின் பிரிவால் துயர் உற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன். ” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.