சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம் ; சமந்த வித்யாரத்ன

85 0

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களில் பல ஆண்டுகாலமாக பலவந்தமான முறையில்  வசித்த செந்தில் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோரை ஒருவார காலத்துக்குள் வெளியேற்றியுள்ளோம்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக போவதில்லை. கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் ஊழல்வாதிகள் தற்போது திணறுகிறார்கள் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்  சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் தொடர்பான  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சிறந்த மாற்றத்துக்காகவே கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிளீன் பற்றி பேசுவதற்கு அரசாங்கத்துக்கு தார்மீக உரிமையில்லை என்று எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாட்டு மக்கள் அத்திட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

பொதுத்தேர்தலில் 225 உறுப்பினர்களில் 157 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தூய்மையான நீரில் அசுத்த நீர் கலப்பது இயல்பானதே அதுபோலவே இன்று ஓரிருவர்  பாராளுமன்றத்தில் மிகுதியாகியுள்ளார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பில்  முறையற்ற கருத்துக்களை உரத்த குரலில் பேசினார். இவரை பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவர் பதுளை தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தி மன்னிப்பு கோர செய்து மண்டியிட வைத்தவர் இந்த சம்பவம் தொடர்பில் அந்த அதிபர் 2018.01.03 ஆம் திகதி  காலப்பகுதியில் பொலிஸ் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நபர் கடந்த அரசாங்கத்தில் .இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் எப்பாவெல தொழிற்சாலைக்கு சென்று அங்கிருந்த உத்தியோகஸ்த்தர்களை தாக்கினார்.

முறையற்ற வகையில் செயற்பட்டு, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 786 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே  தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் கலக்கமடைந்து உரத்த குரலில்  கூச்சலிடுகிறார்கள்.

காலம் கடந்த பின்னர் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தவறை ஏற்றுக் கொண்டுள்ளார். தாங்கள் தவறிழைத்து விட்டதாக குறிப்பிடுகிறார்.

தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் தவறிழைக்காது. மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறோம்;. பெரும்பான்மை உள்ளது என்பதால் தன்னிச்சையாக செயற்படவில்லை.

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் எனக்கு பெயர் குறிப்பிடாத கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது.

அக்கடிதத்தில்  பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களை அரசியல்வாதிகள்  பலவந்தமான முறையில்  கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் தற்றுணிவு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கடந்த காலங்களில் ஜனாதிபதி, அமைச்சர் என்று பலருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது’ பெயர் குறிப்பிடப்படாத கடிதத்தால் நான் அதனை பெரிதாக கவனத்திற் கொள்ளவில்லை.

இருப்பினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயுமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினேன்.அதற்கமைவாக  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டம் எட்டபிட்டிய திக்வெல்ல ‘ டிஸ்லேன்ட்’  பங்களாவில்   கடந்த 13 ஆண்டுகளாக  பலவந்தமான முறையில் இருந்துள்ளார்.

அதேபோல் கடந்த அரசாங்கத்தில் ஆளும் மற்றும் எதிர் என்று அனைத்து பக்கங்களிலும் இருந்த வடிவேல் சுரேஸ்  பதுளை ஹாலி எல பகுதியில் பெருந்தோட்டத்துக்கு சொந்தமான  பங்களாவில் கடந்த 19 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.

ஆனால் இவ்விருவரும் தமது சொந்த பங்களாவில் வாழ்வதாக தான் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டார்கள். அவர்களும் உண்மையை அறியவில்லை.

விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.இதற்கமைய  செந்தில் தொண்டமானுக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ‘ தற்போதைய  அரசாங்கத்திடம் ஏதும் முடியாது.’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பங்களாவில் இருந்து வெளியேறியுள்ளார்.

19 ஆண்டுகளாக வசிக்கும் பங்களாவில் தனக்கு சட்ட உரிமை உள்ளது என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டு 1 வாரம் காலவகாசம் கோரியிருந்தார். அவருக்கு காலவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும் அவர் தனது உரிமையை நிரூவிக்கவில்லை. பின்னர் பங்களாவில் இருந்து வெளியேறினார்.இது ஒரு எடுத்துக்காட்டு சம்பவம் மாத்திரமே.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணை செல்லவில்லை. கடந்த கால ஊழல்கள் தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் விசாரணைகள் எடுக்கப்பட்டு,  முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் திணறுகிறார்கள்.

போலியான குற்றச்சாட்டுக்களை  முன்வைக்கிறார்கள்.போலியான குற்றச்சாட்டுக்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை. எமது இலக்கை நிச்சயம் அடைவோம் என்றார்.