விருது வழங்குவது நீதி அமைச்சருக்கு தெரியாது

81 0

அண்மையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவின் போது இலங்கை சிறைச்சாலை முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு விருது வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அறிவிக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலின் போது பேசிய பிரதி அமைச்சர், விருது வழங்குவதற்கு முன்னர் இது தொடர்பில் நீதி அமைச்சருக்கு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கவில்லை என்று கூறினார்.

சம்பவம் தொடர்பில் நீதியமைச்சர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு விருது வழங்கியமைக்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் விமர்சிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், ஒகஸ்ட் 2024 இல், எமில் ரஞ்சன் லமாஹேவாவை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனைக்கு எதிராக லமாஹேவா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

எமில் ரஞ்சன் லமாஹேவாவின் 34 வருட சேவைக்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் தற்போதைய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடமிருந்து அவர் விருதையும் பெற்றுக்கொண்டார்