வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உழுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை

102 0
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உழுந்து அறுவடை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 – 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்போகத்தில் 5,650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கையிடப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.

உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும்போது விலை குறைவாகத்தான் இருக்கும். உளுந்தை பத்திரமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.

விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும். அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும். அரசாங்கம் உளுந்துக்கான விலை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.