க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இந்த நிகழ்வுக்காக 9 இலட்சம் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் எண்ணக்கருவுக்கு அமைய செயற்படுத்தப்பட்டுள்ள க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுப்படுத்தலை முன்வைத்தார்.
க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கு 70 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. அனைத்து அரச நிகழ்வுகளையும் எளிமையான முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை வழங்கியுள்ளார்.
அரச செலவுகளை மட்டுப்படுத்தும் போது அதற்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இதற்கமைய கடந்த 1 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட நிகழ்வுக்கு 9 இலட்சம் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டது. ஒதுக்கப்பட்ட 9 இலட்சத்துக்கு மேலதிகமாக ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை.
நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட 9 இலட்சம் ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை. நிகழ்வுக்கு பாட்டு எழுதிய தரப்பினருக்கும், இசை நிகழ்வு நடத்தியவர்களுக்கும், விளம்பரப்படுத்தல்களை முன்னெடுத்தவர்களுக்கும் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது என்றார்.