முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக, கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கொலை குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் வாகன சாரதியை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக அமைச்சரின் மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்ததை அடுத்து மெய் பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவர், வெளிநாடு செல்ல இருந்த நிலையில் வியாழக்கிழமை (2) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (03) சிஜடி யினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதை அடுத்து வழக்கை விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

