புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒருமித்த பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவதாக சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசியல் தீர்வு மற்றும் வட, கிழக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து ஓரணியாக செயற்படுவதற்கு உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன்போது தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழர்களுக்கான தீர்வு குறித்து கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றை எட்டுதல் என்பன தொடர்பில் தமிழ்த்தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி அச்சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறு ஒன்றிணைந்து சந்தித்துப் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழ்த்தேசியக்கட்சிகள் கூட்டிணைந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பொதுவான தீர்வுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அப்பால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, வட- கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகளின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஆளுந்தரப்பான தேசிய மக்கள் சக்தியின் வட, கிழக்கு உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு ஓரணியாக செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதனை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகளை எதிர்வருங்காலத்தில் முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

