அண்மையில் உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவையென சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கியமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில சிறைக்கைதிகளுக்கு விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கபட்டுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு அண்மையில் குற்றச்சாட்டியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் வினவிய போதே சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

