கதிரை சின்னத்தில் பழைய கூட்டணியிலேயே போட்டியிடுவோம்

128 0

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் கதிரை சின்னத்தில் பழைய கூட்டணியிலேயே போட்டியிடுவோம். கடந்த காலங்களில் கட்சியை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தலுக்கு நாம் தயாராகி வருகின்றோம். இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். இந்த தேர்தல்களில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. எனவே சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் மீண்டும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது எப்போதும் யாராலும் அழிக்க முடியாத ஒரு கட்சியாகும். தாய் வீடான சுதந்திர கட்சியை கைவிட்டு பொதுஜன பெரமுனவில் இணைந்த பலரும் தற்போது தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அவர்களையும் மீண்டும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

கடந்த தேர்தல்களில் ஏமாற்றமடைந்து கைவிடப்பட்டவர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக மீண்டும் எம்முடன் இணைய வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தை விமர்சிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது எமக்கு தெரியாது. எனினும் இந்த வேலைத்திட்டத்தை அவர்கள் தம்மிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

காரணம் தேசிய மக்கள் சக்தியிலுள்ளவர்கள் தான் பொய் கூறி அவமானத்துக்கு உள்ளாகினர். உண்மையில் நாட்டிலுள்ள கூடாத விடயங்களை அழிப்பதற்கு இந்த வேலைத்திட்டத்தைப் பயன்படுத்தினால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.