ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு “சுனாமி பேபி” அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (26) அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது.
இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிறைந்த குழந்தையாக “சுனாமி பேபி 81” எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக ஜெயராசா அபிலாஷ் விளங்கினார்.

“இந்தக் குழந்தை என்னுடையது” என ஒன்பது தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதனையடுத்து, 52 நாட்களின் பின்னர், ஜெயராசா – யுனித்தலா தம்பதியினரின் புதல்வனே அபிலாஷ் என்பது நிரூபணமாகியது.
பின்னர் அந்த குழந்தை ஜெயராசா – யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.
தற்போது 20 வயதுடைய “சுனாமி பேபி” என அறியப்படும் அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக பெற்றோருடன் அஞ்சலி செலுத்தினார்.


