இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று சனிக்கிழமை (21) கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளைத் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்காக தனது நன்றியைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மேலும் இந்த உறவுகளைப் பேணிச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் கொரிய குடியரசில் வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கையர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், அந்த வேலைவாய்ப்புக்களுக்குத் தேவையான பயிற்சி பெற்ற ஊழியர்களை வழங்குவதற்கு நாடாக உச்சபட்சமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் தனது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

