நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம்

111 0

இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சுகாதார அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு, சீன விஞ்ஞானக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மிக முக்கியமான சுகாதார சவாலை எதிர் கொள்வதற்காக ஒத்துழைப்பு மற்றும் பளிப்பை வழங்கிய சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கு பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதுடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய செயலமர்வுகள் மற்றும் புதிய ஆய்வுகள் அறிவையும் விஞ்ஞானத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான களமாக அமைகின்றன.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் சிறுநீரக நோயாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. மேலும் இந்த சவாலை எதிர் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான ஆதரவையும் தொழில்நுட்ப வழிகாட்டலையும் வழங்கிவரும் சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு மீண்டு ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.