இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று புதன்கிழமை (18) யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எஸ்.குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.







