சமுர்த்தி அலுவலக உதவியாளர் மனைவி, பிள்ளையின் முன் சுட்டுக்கொலை !

93 0

மீகொட – நாகஹவத்த பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த குறித்த நபரை இலக்கு வைத்து, நேற்று சனிக்கிழமை  (14) இரவு  அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல செத்சிரிபாயவில் உள்ள சமுர்த்தி பிரதான காரியாலயத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய 32 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பகுதியில்  உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது ஒன்றரை வயது மகள் மற்றும் அவரது மனைவி காரில் இருந்ததாகவும்  இனந்தெரியாத நபர் ஒருவர் காரை இடைமறித்ததுடன் , மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்ட தப்பியோடியுள்ளதாக  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.