அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம்

128 0

வீட்டுப்பணிப்பெண் ஒருவரின் உரிமைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000  அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

குறிப்பிட்ட வீட்டுப்பணியாளருக்கு செலுத்தாத சம்பளங்கள் மற்றும் அதற்கான வட்டியாக 500,000 அமெரிக்க டொலர்களை ஹிமாலி அருணதிலக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையிலேயே இந்த அபராதத்தை விதித்துள்ளது.

2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவிற்கான பிரதிஉயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்த அவர் இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயரான பிரியங்க தனரட்ணவை டீக்கினில் உள்ள தனது இராஜதந்திரிகளிற்கான இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்ததார்.

அவுஸ்திரேலியாவிற்கு பிரியங்காவை வேலைக்கு அழைத்திருந்த ஹிமாலி அவுஸ்திரேலியாவின்  சம்பளங்கள் நிபந்தனைகளிற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

எனினும் அந்த வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு  ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மூன்று வருடங்கள் தான் வேலை பார்த்ததாகவும்,தன்னை சமையலறையில் எண்ணையை ஊற்றி கொழுத்திக்கொள்ள முயன்றதால்தான் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

நாளாந்தம் அந்த பணிப்பெண் 14 மணித்தியாலங்கள் பணியாற்றினார் என கணக்கிடப்பட்டது,எனினும் அவரது வேலை இரவு 1 மணி வரை நீடித்தது.

மேலும் பிரதி உயர்ஸ்தானிகர் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் தான் எடுத்துவைத்துக்கொண்டார்,அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.எப்போதாவது அயலில் உள்ள பகுதிகளிற்கு சிறிது நேரம் நடந்து செல்ல அனுமதித்தார்.

அவர் எனக்கு உரிய உணவையும்  உடையையும் வழங்கவில்லை ஒழுங்காக நடத்தவில்லை என்பது போல உணர்ந்தேன் என  அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.