ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

83 0
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளை உடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (4) கொழும்பு கோட்டையில் இருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த 36 வயதான ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி, ரயில் கதவுப் பகுதியில் நின்றவாறு தனது கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே பயணித்துள்ளார்.

இதன்போது ரயில் பாதைக்கு அருகில், வீதியில் நின்ற இரு இளைஞர்கள் தனது கையை தடியால் தாக்கியதாகவும், இதன் காரணமாக 5 லட்சம் ரூபா பெறுமதியான தனது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்ததாகவும், தடியில் அடித்தபோது தனது தலைபகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் அப்பெண் எல்ல சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

ஹட்டனுக்கும் வட்டவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற  இச்சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், சம்பவ தினத்தன்று இரவு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று  தனது கையடக்கத் தொலைபேசியை பாதிக்கப்பட்ட பெண் பெற்றுக்கொண்டார்.