மட்டக்களப்பில் வெள்ளம் – வயலுக்குள் சிக்கியுள்ள 7 விவசாயிகள்

144 0
மட்டக்களப்பு  புல்லுமலை  தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அந்த விவசாயிகள் தமது வாடிகளிலிருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர்.

இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினரின் உதவி கோரியுள்ளதாகவும்   வெள்ள நீர் அதிகமாக பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காற்று வீசுவதால் விமானப்படையின் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாதவாறு காலநிலை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வயல் பகுதிகளில் சிக்குண்டிருப்பவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயம்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் வயல் பகுதியில் சிக்ண்டிருப்பவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.