குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதி 2 வயதும் 2 மாதமுமான ஆண்குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், கல்கமுவ புந்துருவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு ரயில் பாதை அமைந்துள்ளதால் குழந்தையின் பெற்றோர், குழந்தை ரயில் பாதைக்கு செல்ல முடியாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி ஒன்றை அமைத்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று இந்த குழந்தை தனது வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து வடக்கு ரயில் பாதைக்கு ஓடிச் சென்றுள்ளது.
அவ்வேளை, குழந்தையை கண்ட நபரொருவர் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அக்குழந்தை அதிவேக ரயிலில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

