ரத்தொலுவையில் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் கலந்துகொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1988-89ம் ஆண்டுகளில் ஜேவியின் கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் 33 வருடங்களாக நீதிக்காக போராடுகின்றனர் இந்த வருடம் 34வது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன ஜனாதிபதியை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேவியின் இரண்டாவது கிளர்ச்சி காலத்தின் போது 60,000க்கும் அதிகமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்,கடத்தப்பட்டனர் அல்லது காணாமல்போயினர் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு முன்னைய அரசாங்கங்கள் எவற்றிடமும் இருந்ததில்லை என காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதியை வழங்குவேன் என்பது தற்போதைய ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் ஒன்று என காணாமல்போனவர்களின் குடும்பங்களின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்தகாலங்களில் இந்த நினைவுகூரும் நிகழ்விற்கு நாங்கள் ஜனாதிபதிகள் எவரையும் அழைக்கவில்லை அவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காணமுயலாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் அலுவலகம்,இழப்பீட்டிந்கான அலுவலகம் போன்றவற்றை அமைத்ததன் மூலம் சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முன்னைய ஜனாதிபதிகளிற்கு இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு இருக்கவில்லை என பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர்கள் சர்வதேசசமூகத்தினை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த அலுவலகங்களை அமைத்தனர், ஆகவே தற்போதைய அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு கடந்த காலங்களில் காணாமல் போனவர்களிற்கு நீதியை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்,நாங்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் ஜனாதிபதியை கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டிலேயே பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்து மக்கள் பேச ஆரம்பித்தனர்,ஆனால் எத்தனை பேர் காணாமல்போகச்செய்யப்பட்டனர் என்பது குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் எதுவுமிருக்கவில்லை.
1989ம் ஆண்டிற்கு முன்னர் 1983 முதல் வடக்கிலிருந்து பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன.
கட்டுநாயக்க ஏற்றுமதி வர்த்தக வலயப்பகுதியில் காணாமல்போனவர்களிற்கு நீதி கேட்பதற்கான இயக்கமாக ஆரம்பித்தது,நாடாளாவிய ரீதியில் காணாமலாக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் இயக்கமாக பரிணமித்தது.பிரிட்டோ பெர்ணாண்டோ அதற்கு தலைமை தாங்கினார்.
நினைகூரல்கள் மனிதர்களிற்கு மிகவும் முக்கியமானவை,நேசிக்கப்பட்ட ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டார் என்றால் அது வாழ்நாள் சுமை,எங்களால் இறுதி நிகழ்வுகளை நடத்த முடியாது, அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்கின்றார் மனித உரிமை ஆர்வலர் சுனந்த தேசப்பிரிய.

