கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தை முன்வைத்து வானதி சீனிவாசன் பதிலடி தந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியிருக்கிறார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து, அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசை திருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.
திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்து வரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனைவோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.
முன்னதாக, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது “கோவையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று” என கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு வீடியோ விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

