கொள்கை வெளிப்படுத்தலுக்கு சகல வேட்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும்

88 0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது கொள்கைகளை வெளிப்படுத்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வாய்ப்பளிக்கப்படும். எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் தினித் கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்க தகவல் திணைக்களம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், வேட்பாளருக்கும் சார்பாக செயற்படவில்லை. அனைத்து வேட்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம்.

தேர்தல் காலத்தில் நடுநிலையான தன்மையில் அனைவருக்கும் சமனிலையான வாய்ப்பளிக்கம் வகையில் அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் கொள்கை பிரகடனத்தை வெளியிடுவதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக வாய்ப்பளிக்கப்படும். மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

வாரத்தில் 7 நாட்களும் காலை 10 மணிக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு மணித்தியாலம், பிற்பகல் 2 மணிக்கு பிறிதொரு வேட்பாளருக்கு 1 மணித்தியாலம் என்ற அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும்.

எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அரசாங்க தகவல் திணைக்களம் வழங்க இந்த வாய்ப்பினை பயன்படுத்தும் வேட்பாளர் தமது தேர்தல் பிரச்சாரத்தையும், பிற வேட்பாளர்களுக்கு எதிரான கருத்துக்களையும் குறிப்பிடுவதை இந்த சந்தர்ப்பத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் அந்த வேட்பாளர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.