விஜேதாசவை கைவிட்டு பிரிதொரு தரப்புடன் இணைய தயாராகும் மைத்திரி

196 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்ஷவை கைவிட்டு பிரிதொரு தரப்புடன் இணையவுள்ளார். அவர் கட்சியையும் சீரழித்து இறுதியில் விஜேதாச ராஜபக்ஷவையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி லோரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவருக்கும் குறை கூறிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை அவர்களால் முறையாக முன் கொண்டு செல்ல முடியாது. எதிர்க்கட்சிகள் எமது வேலைத்திட்டத்தை ஆதரிக்காவிட்டாலும், அவற்றை சீர்குலைக்கும் வகையில் செயற்படாமல் இருந்திருக்கலாம்.

எனவே, பொய் வாக்குறுதிகளை நம்பி இனியும் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர் என்பதை மக்கள் தற்போது நேரடியாக உணர்ந்திருப்பார்கள். நாட்டு மக்கள் இம்முறைத் தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு அன்றி தோற்பவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

பிரதான வேட்பாளர்கள் இருவரைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் தமது கட்டுப்பணத்தை இழப்பர். வாக்குகளை சிதறடிப்பதற்காகவும் சிலர் போட்டியிடுகின்றனர். மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் வேறு தரப்பினருடன் இணைவர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் விரைவில் பிரிதொரு தரப்புடன் இணைவார்.

தற்போது அவர் விஜேதாச ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவார். அதனைத் தடுக்க முடியாது. 17ஆம் திகதியின் பின்னர் ரணிலுக்கான அலை வெளிப்படும் என்றார்.