பாடசாலை மாணவனை தாக்கிய போக்குவரத்து பொலிஸார்

111 0

பயாகல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளின் குழுவினர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றமைக்காக 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும், இதன்போது அவரது நண்பர் தலைக்கவசம் அணியாமல் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை துரத்திச் சென்று, மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை தாக்கியுள்ளனர்.

அவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மாணவனின் காதில் தாக்கியதாகவும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனை பல தடவை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் சிகிச்சைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பயாகல பொலிஸ் நிலைய பொலிஸ்மா அதிபருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.