ஒலிம்பிக் பெண்களுக்கான 800 மீ. தகுதிகாணில் 50 வீராங்கனைகளில் தருஷி 45ஆவது; இரண்டாம் வாய்ப்பில் இன்று பங்கேற்கிறார்!

121 0

பிரான்ஸ் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பெணகளுக்கான 800 மீற்றர் தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் இளம் வீராங்கனை தருஷி கருணாரட்ன அப் போட்டியை 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றார்.

இதற்கு அமைய தகுதிகாண் சுற்றின் 6 போட்டிகளிலும் மொத்தமாக பங்குபற்றிய 50 வீராங்கனைகளில் தருஷி கருணாரட்ன ஒட்டுமொத்த நிலையில் 45ஆவது இடத்தைப் பெற்றார்.

தகுதிகாண் சுற்றின் 5ஆவது போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற எதியோப்பிய வீராங்கனை சிகே டுகுமா பதிவுசெய்த 1 நிமிடம் 57.90 செக்கன்ளே முழு தகுதிகாண் சுற்றிலும் அதிசிறந்த நேரப் பெறுதியாக இருந்தது.

800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான அரை இறுதிகளில் பங்குபற்ற 24 வீராங்கனைகள் தெரிவாவர். தகுதிகாண் சுற்றின் 6 போட்டிகளிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற 18 வீராங்கனைகள் நேரடியாக அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

அரை இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறத் தவறிய ஏனையவர்கள் Repechage எனும் இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவர். அதில் அதிசிறந்த நேரப் பெறுதிகளுடன் போட்டியை நிறைவுசெய்யும் 6 வீராங்கனைகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவர்.

தகுதிகாண் சுற்றின் 3ஆவது போட்டியில் பங்குபற்றிய அசியா ராஸிக்கி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் இரண்டாம் வாய்ப்பு சுற்றில் 31 வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். 128 வருட ஒலிம்பிக் வரலாற்றில் ரெப்பேஷாஸ் எனப்படும் இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

ஒலிம்பிக் போட்டியில் தனது முந்தைய தேசிய சாதனையை (2:00.66 நி.) விட அதிசிறந்த நேரத்தைப் பதிவு செய்ய முயற்சிப்பதாக 19 வயதான தருஷி கருணாரட்ன கூறியிருந்தபோதிலும் அவரால் அந்த நேரத்தை அண்மிக்கக்கூடாமால் போனது.

இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்று இன்று நடைபெறவுள்ளது. அப் போட்டியில் தருஷி சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.