வேட்பாளரொருவரை களமிறக்கி வெற்றி பெறக் கூடிய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லை என்பதே யதார்த்தமாகும். அதே வேளை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கும் நாம் தீர்மானிக்கவில்லை. விஜேதாச ராஜபக்ஷவை வேட்பாளராக நாம் முன்னிலைப்படுத்தவுமில்லை என்று சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தேர்தலில் சுதந்திர கட்சி எவ்வாறு செயற்படப் போகிறது என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (26) முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சு.க.வின் தீர்மானம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்குவதற்கு இதுவரையில் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. யாரை முன்னிலைப்படுத்துவது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களுடனும் ஏனைய உறுப்பினர்களுடன் பேசி தீர்மானமொன்றை எடுப்போம்.
அத்தோடு தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக சுதந்திர கட்சி எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாடு மற்றும் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து பொறுத்தமானதொரு தீர்மானத்தை எடுப்போம்.
விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அல்ல. சுதந்திர கட்சியில் எவரும் தீர்மானத்தை முன்வைத்து அவரை வேட்பாளராகக் களமிறக்கவுமில்லை. வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றி பெறக் கூடிய நிலைமையில் சுதந்திர கட்சி இல்லை என்ற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகத்தின் கீழ் கட்சி சுக்கு நூறாக சிதறியுள்ளது. இந்த கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் 5 ஆண்டுகளாவது பாடுபட வேண்டும். அவரும், நிமல் சிறிபா டி சில்வாவும் எடுத்த தவறான தீர்மானங்கள் கட்சியின் சீரழிவுக்கு வழி வகுத்தன. எனவே கட்சியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற நான் தயாராக இல்லை.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் தீர்மானிக்கவில்லை. தனிநபராக என்னால் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியாது. தேர்தல் குறித்த தீர்மானம் கட்சியின் தீர்மானமாக இருக்க வேண்டும். கட்சி எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என்றார்.

