காசாவில் ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 14 பேர் சிறுவர்கள்

125 0

காசாவின் மத்தியில் உள்ள ஐநாவின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

40 பேரில் 14 பேர் சிறுவர்கள் 9 பேர் பெண்கள் என காசாவின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

ஹமாசின் முகாம் அமைந்திருந்த பகுதியையே தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளிற்கு விரைந்துகொண்டிருப்பதை காணமுடிவதாக பிபிசி  தெரிவித்துள்ளது.

 

நுசெய்ரட் அகதிமுகாமில் உள்ள பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டன என நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட வகுப்பறைகளையும் பிரதே அறையில் பிரேதங்களையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

போதும் நாங்கள் பல தடவை இடம்பெயர்ந்துள்ளோம் உறக்கத்திலிருந்த நான்கு பிள்ளைகளை அவர்கள் கொன்றுவிட்டனர் என காயமடைந்த பெண்ணொருவர் கதறுவதை வீடியோ காண்பித்துள்ளது.

அந்த பகுதியில் ஹமாசின் முகாம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுவதை ஹமாஸ் மறுத்துள்ளது.

ஆக்கிரமிப்பு படையினர் இடம்பெயர்ந்த மக்களிற்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற போரை நியாயப்படுத்த கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.