அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியுள்ளது – அகத்தியர் அடிகளார்

29 0

தங்கள் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சி பரிமாறுவதை தடுப்பதன் மூலம்அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியிருப்பதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூதூர் – சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பறிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிசாரால் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது.

சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும்.

புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அச்சுறுத்தியதோடு மட்டுமல்லாது இரவு வேளைகளில் அவர்களது வீடுகளுக்குச் சென்று அராஜகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும், பிணைகூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது.

எனவே உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம். என குறிப்பிட்டுள்ளார்.

சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி  காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூவர் உட்பட பல்கலைக்கழக மாணவி ஒருவரும் அன்றைய தினம் இரவு சம்பூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த நால்வரும் மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்போது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.