புதிய விவசாய வர்த்தகத்துறையொன்று நாட்டிற்கு அவசியம்

64 0

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை  நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை செவ்வாய்க்கிழமை (14) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன்  AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்பட உள்ளது.

இந்த புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக  750 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

 

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் பதிவிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

மேலும் உரையாற்றிய  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

இலங்கையை அண்டியுள்ள நாடுகளின்  சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான சட்ட வரைபுக்கு திங்கட்கிழமை (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”1978ஆம் ஆண்டு முதல் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்று தேவைப்பட்டது. அன்று எம்.டி.எச். ஜெயவர்தனவின் இருப்பிடமாக விளங்கும் இந்தப் பகுதியில், இவ்வாறான பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்குத் தேவையான காணி வழங்கப்பட்டது. அப்போது இந்தப் பகுதி நகரமயமாக்கப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக  நவீன் திசாநாயக்க இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தார். பின்னர் நியமிக்கப்பட்ட  பெருந்தோட்ட அமைச்சர்கள் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிறுவனத்தை அபிவிருத்தி செய்யும் போது, ஒரு வளாகத்தை தோட்டப் பகுதிக்கு மாற்றுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். கண்டி, மாத்தளை மாவட்டங்களைப் போன்று அனைத்து முக்கிய பயிர்களும் பயிரிடப்படும் மாவட்டத்தில் ஒரு வளாகத்தை திறப்பது மிகவும் முக்கியமானது. இந்தத் தொழிற்துறையில் பணிபுரிந்த எனது நண்பர்கள் பயிற்சிக்காக நுவரெலியா செல்ல வேண்டியிருந்தது. நமது விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. விவசாயத்தின் மூலம் இந்த நிலையை அடைய வாய்ப்பு கிடைத்தது.

நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டில் விவசாய உற்பத்தி தடைப்பட்டிருந்தது. மேலும், ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால், நமது ஆடைத் தொழிலுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருக்கவில்லை.

எனவே முதலில் இந்த நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்ய பாடுபட்டோம். 2022, 2023 இல்  சிறுபோகம்  மற்றும் 2023 இல் பெரும்போகத்தில் வெற்றியளித்ததன் காரணமாக, இந்த திட்டத்தைத் தொடர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி,  விவசாயத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரம்   ஸ்திரப்படுத்தப்பட்டது என்றே கூற வேண்டும்.

இப்போது இந்த நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். கடனை அடைக்க எங்களுக்கு கால அவகாசம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, அதிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை. மேலும் நாம் எப்போதும் கடனில் வாழ முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைபுக்கு திங்கட்கிழமை (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது நாம் இந்த திட்டத்தை முன்னோக்கி செயல்படுத்த வேண்டும்.

வரலாற்று ரீதியாக நமது விவசாயம், ஏற்றுமதி விவசாயமாக மாறிவிட்டது. சிங்கள மன்னராட்சியின்  போது தானியங்கள் பயிரிடப்பட்டன. மேலும், ஈர மண்டலத்தில் வாசனைப் பொருட்கள் பயிரிடப்பட்டன. வெள்ளையர்களின் வருகைக்குப் பின் தேயிலை, தென்னை, இறப்பர்  என்பன பயிரிடப்பட்டன. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாம் ஒரு நாடாக முன்னேறவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் டி.எஸ். சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் நாம் அரிசியில் மட்டுமே தன்னிறைவு அடைய முடிந்தது.

இப்போது நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், ஏற்றுமதி விவசாயத் தொழிலை மேம்படுத்தவும் தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகியவை நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பயிர்களாக மாறியுள்ளன.

வெள்ளையர்கள் விரட்டப்பட்டு தோட்டங்களை நாம் கையகப்படுத்தியதால் அவர்கள் கென்யாவில் தேயிலை உற்பத்தியை ஊக்குவித்து எமக்கு போட்டியாக செயற்படுகின்றனர். வியட்நாமும் இறப்பர் செய்கையை மேம்படுத்தி இலங்கையுடன் போட்டியிடுகிறது. எனவே, இந்தப் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் தோட்டத் தொழிலை மாற்றியமைக்க வேண்டும்.

தற்போது விவசாயத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதனால் நாம் தோட்டங்களை விவசாய வர்த்தகமாக மாற்றி உற்பத்தியை பலப்படுத்த வேண்டும். தேயிலை மற்றும் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று எமது தேயிலை தொழில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் அதனை சாதகமாக செய்கின்றன.

நாட்டின் பாரம்பரிய பயிர் உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். நமது நாடு கோகோவா, கருவா மற்றும் ஏனைய மசாலாப் பொருட்களையும் மீண்டும் நடுகை செய்ய வேண்டும். புதிய பயிர்களை விளைவிக்க வேண்டும். அதற்காக இத்துறைக்கு புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.  இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்க சிறு தோட்ட உரிமையாளர்களையும் இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயத்தை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும். எனவே தற்போதுள்ள பயிர்கள் மற்றும் காணிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி 05 இலட்சம் ஏக்கர் புதிய காணியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கு நவீன விவசாயமும், நவீன விவசாய வர்த்தகமும் அவசியம். இந்த நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்.

எதிர்காலத்தில் இலங்கையை சூழவுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் உலக மக்கள் தொகைக்கு உணவுச் சந்தையை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். பழைய தோட்டத் தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வியாபாரத்தை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும். புதிய சட்டத்தின் ஊடாக நிறுவனங்களுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்க்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர:

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும். இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது. நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பட்டத்தை வழங்க முடியும்.

பெருந்தோட்ட கைத்தொழில் தொடர்பான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் பல்கலைக்கழகமாக இந்த நிறுவனம் மாற்றப்படவுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தை சகல வசதிகளுடனும் கூடிய பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியான காலத்தில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டார். போராட்டம் நடந்த நேரத்தில், பிரதமர் இல்லாமல் ஒரு வாரம் கடந்தது. அப்போது நாட்டை பொறுப்பேற்க எந்த தலைவரும் இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்று, விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்புவதற்குத் தேவையான உரங்களை வழங்கியிருக்கிறார். நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொண்டு வருவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

அதனாலேயே கடந்த இரண்டு போகங்களில் நாட்டுக்குத் தேவையான அரிசியை விவசாயிகள் உற்பத்தி செய்தனர். தற்போது தேயிலை தொழில்துறையும் வழமைக்கு திரும்பியுள்ளது. காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனையை பதிவு செய்ய முடியும்.

இன்று நாட்டின் பொருளாதாரம் நிலைத் தன்மையை அடைந்து வருகிறது. ஜனாதிபதி நாட்டில் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்காவிட்டால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்படும் என்பது உறுதி” என்று தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திஸாநாயக்க:

”பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நானே சமர்ப்பித்திருந்தேன். அப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ தேயிலை 270 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே தேயிலை கிலோ 600 ரூபாய்க்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக நான் எடுத்த தீர்மானங்களை அடுத்து வந்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்களினால் முன்னோக்கி நகர்த்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். தேயிலை தொழில் துறையை மேம்படுத்த வர்த்தகம் வலுவடைய வேண்டும். உலக சந்தையில் நம் நாட்டின் தேயிலையின் நாமம் நிலைபெற வேண்டும். அதற்கு இந்த நிறுவனம் வலுவான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர்களான டி. பி.ஹேரத், காதர் மஸ்தான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் புஷ்பிகா சமரகோன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.