கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

52 0

சட்டவிரோதமான முறையில் 45 லீட்டர் கசிப்பை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்ததுடன், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இதனால் குறித்த வாலிபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலிருந்து புதுக் குடியிருப்பு பகுதிக்கு கடத்தி வந்து கொண்டிருந்த நிலையிலேயே மேற்படி வாலிபர்கள் பொதுமக்களால் மடைக்க பிடிக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சுமார் 45 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாலிபர்கள் வைத்தியசாலையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.