3000 தாதியர்களை புதிதாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ் பத்திரண

18 0

அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியின்போது,

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கல்வி பொது தராதர உயர் தரத்தில் கணிதம், உயிரியல்  விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தோற்றியுள்ள மாணவர்கள் தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் செப்டம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 3100 பேர் அதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேலும் 3863 பேர் இந்த சேவையில் இணைத்துக் கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் காணப்படுகின்றனர் என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

3000 தாதியர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் நாட்டில் 45,000 தாதியர்கள் சேவையில் உள்ளனர். தற்போது சுமார் 1000 பேருக்கான வெற்றிடமே நிலவுகிறது. அந்த வெற்றிடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போல் 45 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படவில்லை 45 ஆயிரம் பேர் தற்போது சேவையில் உள்ளனர் என்பதே உண்மை என்றார்.