பொது சுகாதார பரிசோதகரின் படுகொலையுடன் தொடர்புடையவர் கட்டுநாயக்கவில் கைது !

9 0

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட பல கொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த  சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு ஒரு பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போதே இவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (06) இரவு கைதானார்.

இவர் எல்பிட்டிய கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன் இவருடைய கடவுச்சீட்டு முக அங்கீகார முறைமை ( Facial Recognition System) மூலம் அடையாளம் காணப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி விட்டு வெளியேறியுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன்  மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் .