நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவு: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி நடவடிக்கை

16 0

 ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பணத்தை கொண்டு சென்றதாக பாஜக நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான சென்னை கொளத்தூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார்.

இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சிபிசிஐடி பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் எனக் கூறப்படும் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டுள்ள போலீஸார் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அடுத்த கட்டமாக பாஜக பிரமுகர் கோவர்த்தனிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிலேயே உள்ளார். விசாரணைக்கு அவரால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா என்பதை அறிவதற்காக 2 தினங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

உடல் நலக்குறைவால் நேரில் அழைத்து விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், சட்ட விதிமுறைகளை பின்பற்றி ஓரிரு தினங்களில் அவர் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரனிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கையும் தொடங்கி உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.