மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – பிரதேச சபை,சுகாதார துறை அலட்சியம்

24 0

மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக  வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு  பாரிய அளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும்  நிறைந்து  காணப்படுவதுடன் மிருகங்களும் அவற்றை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டுவருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

அதே நேரம் பொலித்தீன் பைகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.

எனவே, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு எதிராக பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.